இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு – தேர்தலில் அபார வெற்றி!

இஸ்ரேல் பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார்

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார்.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியைச் சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதமரானார். ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நேதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெற்றன. இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் அண்மையில் பொதுத் தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகும் – யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 120 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் தற்போதைய நிலவரப்படி 86 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அவற்றில், 65 தொகுதிகளில் நேதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் பதவி ஏற்க உள்ளார். மேலும் அவருக்கு வலதுசாரி அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous post ‘நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குக..!’ – முதல்வருக்கு ஆளுநர் பரபரப்பு கடிதம்!
Next post தேசிய விளையாட்டு விருதுகள்: பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது!